அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை எப்போது? இன்றே அறிவிக்க வலியுறுத்துகிறது பாஜக
2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதியன்றுதான் நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நாம் செலுத்தப் போகும் உண்மையான மரியாதை என்பது இத்தாக்குதல் வழக்கில் தூக்குண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை தூக்கிலிடுவதுதான். அவர் எப்பொழுது தூக்கிலிடப்படுவார் என்பதை உள்துறை அமைச்சர் இன்றே நாடாளுமன்றத்தில் அறிவித்தால் உயிரிழந்தோருக்கு செலுத்துகிற மிகச் சிறந்த மரியாதையாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் நாம் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்துகிறோம். அப்போதெல்லாம் ஒரே ஒரு கேள்வி எழாமல் இல்லை. உச்சநீதிமன்றத்தால் அப்சல் குருவின் தூக்கு உறுதி செய்யப்பட்டுவிட்ட பிறகும் ஏன் அவரை தூக்கில் போடாமல் வைத்திருக்கிறோம் என்ற கேள்வி தான் அது. மும்பை தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட அரசு நிச்சயம் அப்சல் குருவையும் தூக்கிலிடும் என நம்புகிறோம் என்றார்.
ஆனால் சுஷ்மா ஸ்வராஜின் கோரிக்கையை நிராகரித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்பிஎன் சிங், நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்துகிற நேரத்தில் அதை அரசியலாக்கக் கூடாது. ஒவ்வொரு ஆண்டும் இந்த டிசம்பர் 13-ந் தேதியை அரசியாக்கிப் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார்.
இதனிடையே அப்சல் குருவை தூக்கிலிடக் கூடாது என்று மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா கருத்து தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.