வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் தொடங்கியது
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகல் பத்து, ராப்பத்து என, தொடர்ந்து, 21 நாள் திருவிழா நடக்கும். நடப்பாண்டு, வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 13ம் தேதி துவங்கி, ஜனவரி, 3ம் தேதி வரை நடக்கிறது.
வைகுண்ட சொர்க்கவாசல்
வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்கியது. இதனையடுத்து பகல்பத்து இன்று தொடங்கி 23ம் தேதிவரை 10 நாட்கள் நடைபெறும். சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு 24ம் தேதி அதிகாலை, 4.45 மணிக்கு நடக்கிறது. அன்று காலை, 4.45 மணி முதல், இரவு, 10 மணி வரை, சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதன்பின்னர் ராப்பத்து விழாக்கள் ஜனவரி 3ம் தேதிவரை நடைபெறும்.
ஆயிரங்கால் மண்டபம் சர்ச்சை
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று திருமாமணி மண்டபத்தில் தங்கக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருள்வதால், ஆயிரங்கால் மண்டபம் சொர்க்கமாக மாறும் என்பது ஐதீகம். ஆனால், "பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்பதால், நம்பெருமாள் எழுந்தருளக்கூடிய, ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், 960 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது, ஆயிரங்கால் மண்டபத்திற்கு வெளியே, புதிதாக வெட்டப்பட்ட, 40 தென்னை மரங்களை ஊன்றி, புதிய தென்னங்கீற்றுகளை கொண்டு, பிரம்மாண்ட பந்தல் அமைப்பது வழக்கம். ஆனால், தற்போது, 40 தென்னை மரங்கள் ஊன்றப்பட்ட நிலையில், கீற்றுகளுக்கு பதிலாக, தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோவிலில் கடைபிடிக்கப்படும் நடைமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.