அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் மோடு லைசென்ஸில் இழுபறி.. பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: அரசு கேபிள் நிறுவனம் இந்திய அரசிடம் டிஜிட்டல் மோடுக்கு மாறுவதற்கான உரிமங்கள் கேட்டு விண்ணப்பித்தது. ஆனால் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. உடனே இதில் தலையிட்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த மே 2011ம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், செயல்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுத்தேன். தமிழ்நாடு அரசின் துணை நிறுவனமாக செயல்படும் வண்ணம் அரசு கேபிள் புதுப்பிக்கப்பட்டது. தற்போது 31 மாவட்டங்களில் அது தனது சேவையை விரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய கேபிள் நிறுவனமாக அரசு கேபிள் உருவெடுத்துள்ளது. மக்களுக்கு குறைந்த விலையில் சேவையை வழங்க நூறு சேனல்களுடன் ரூ.70 என்ற கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் சேவையை இந்த நிறுவனம் வழங்கிவருகிறது.
மேலும், மத்திய அரசு டிஜிட்டல் முறைக்கு மாற உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, சென்னையில் அரசு கேபிள் நிறுவனம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தில் வெறும் 30-70 சேனல்களை வைத்துக் கொண்டு மக்களிடம் ரூ.150-250 வரை மாதந்தோறும் பெறும் தனியார் டி.வி.ஆபரேட்டர்களுக்குப் போட்டியாக மிகக் குறைந்த விலையில் அரசே சுமார் 100 சேனல்களை ரூ.70க்கு வழங்குவதை மக்கள் வரவேற்கின்றனர்.
தற்போது கண்டிஷனல் ஆக்சஸ் சிஸ்டமில் இயங்கும் அரசு கார்ப்பரேஷனுக்கு சென்னை நகரில் புதிய முறைக்கு மாறுமாறு மத்திய அரசில் இருந்து கடந்த 2008ம் ஆண்டு ஏப்.2ல் உத்தரவு வந்தது. இதை அடுத்து அரசு கேபிள் நிறுவனம் இந்திய அரசிடம் டிஜிட்டல் மோடுக்கு மாறுவதற்கான உரிமங்கள் கேட்டு விண்ணப்பித்தது.
விண்ணப்பித்து நெடுநாட்கள் ஆகியும் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. இதே காலகட்டத்தில் விண்ணப்பித்த 8 தனியார் நிறுவனங்களுக்கு உரிமங்களை அரசின் மத்திய ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. ஆனால் இன்னமும் அரசு கேபிளுக்கு உரிமம் வழங்கவில்லை.
இது குறித்து தமிழக அரசின் சார்பில் தம்பிதுரை எம்.பி. தலைமையில் குழு மத்திய அமைச்சர் அம்பிகா சோனியைச் சந்தித்து மனு கொடுத்தது. மேலும் எம்.பி.க்கள் பிரதமரான தங்களையும் சந்தித்து இது குறித்து வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் 2012 டிச.6ம் தேதி அன்று இதற்கான உரிமங்களை அரசு கேபிள் டிவிக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் மத்திய அரசு இழுத்தடித்தடித்து வருவதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். உடனேஅரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.