பெயிலாக்கியதால் ஆத்திரம்! ஆசிரியர்களை விடிய விடிய சிறை வைத்த மாணவிகள்!
கொல்கத்தா:கொல்கத்தாவில் தேர்வில் பெயிலாக்கியதால் ஆத்திரமடைந்த 29 மாணவிகள் தலைமை ஆசிரியை உட்பட ஆசிரியைகளை 21 மணி நேரம் சிறை பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு கொல்கத்தாவில் ரிஷி அரவிந்த் பாலிகா வித்யாலயா என்ற பள்ளியில் பிளஸ் டூ மாணவிகளுக்கு பொதுத்தேர்வுக்கு முந்தைய மாதிரி தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 105 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 76 பேர் பாஸாகிவிட்டனர். 29 மாணவிகள் 2க்கும் மேற்பட்ட பாடங்களில் பெயிலாகிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகள் நேற்று மாலை 3 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் தங்களுக்கு வகுப்பு ஆசிரியைகளை ஒரு அறையில் பூட்டி சிறை வைத்துவிட்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியையோ கல்வி அமைச்சர் தொடங்கி பல அதிகாரிகளுக்கும் போன் செய்து பார்த்தும் எந்தப் பயனும் இல்லை. இரவு நேரமாகிவிட்டது. ஆனால் மாணவிகள் விடுவதாக இல்லை. சில மாணவிகளின் பெற்றோரும் இதில் இணைந்து கொண்டனர். இரவில் அங்கு போலீஸ் வந்தும் எந்தப் பயனும் இல்லை. விடிய விடிய தலைமை ஆசிரியை உட்பட ஆசிரியையகள் பள்ளியிலேயே சிறை வைக்கப்பட்டனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் உயர் கல்வித் துறை செயலாளர் அசிந்தியா பால் நேரில் வந்து மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகள் தரப்பில், தங்களுக்கு வேண்டுமென்றே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு பெயிலாக்கிவிட்டனர் என்று புகார் கூறினர். இதைத் தொடர்ந்து 29 மாணவிகளினது தேர்வுத் தாள்கள் அனைத்தும் திருப்பி மதிப்பீடு செய்வதாக உயர்கல்வித் துறை செயலர் அசிந்தியா பால் கூறியதால் தங்களது சிறைபிடிப்பு போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர். சுமார் 21 மணி நேர சிறை வைப்புக்குப் பிறகு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியையகளை மாணவிகள் விடுவித்தனர்.
இத்துடன் இந்தப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. 10-ம் வகுப்பு மாணவிகள் சிலரும் தங்களையும் பெயிலாக்கிவிட்ட ஆசிரியைகளை சிறைபிடிக்கும் முடிவில் இருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.