சைக்கிள் ஓட்டி சாலை விபத்தில் சிக்கி மரணம்...தமிழகத்திற்கு 2வது இடம்
டெல்லி: சைக்கிளில் பயணம் செய்வோர் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகும் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி நான்கு சைக்கிள் ஓட்டிகள் சாலைவிபத்துக்களில் மரணமடைவதாக மத்திய அரசின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மட்டும் நாடுமுழுவதம் 6824 சைக்கிள் ஓட்டிகள் சாலை விபத்துக்களில் மரணமடைந்திருக்கின்றனர் என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம்.
இது குறித்து அந்த அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரபிரதேசம் நம்பர் 1
இந்தியாவிலேயே வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தான் தமிழ்நாட்டை விட அதிக அளவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்துக்களில் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கு கடந்த ஆண்டு 2,338 பேர் சைக்கிளில் பயணம் செய்யும்போது விபத்துக்களில் சிக்கி இறந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 1412 பேர்
சைக்கிள் ஓட்டுபவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி இறக்கும் மாநிலங்களில் தமிழ் நாடு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1412 பேர் சைக்கிளில் ப்யணிக்கும் போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் ஒரு நாளுக்கு நான்கு பேர் என்ற விகிதத்தில்கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
தனி சாலை இல்லை
தமிழ்நாட்டைப்பொறுத்தவரை, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கென்று சாலைகளில் தனியாக ஒதுக்கப்பட்ட வழிகள் இல்லாத்தே, இந்த அளவு அதிக எண்ணிக்கையில் சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கி இறப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்று தமிழ் நாடு சைக்கிளிங் சங்கத்தின் செயலர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் சாலைகள்
அமெரிக்கா, ப்ரான்ஸ், சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியாக சாலைகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த வசதி இல்லை என்பது அவரது ஆதங்கம்
அது போல சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது பற்றிய போதிய அளவு பயிற்சியின்மையும் ஒரு காரணம் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அரசு ஊக்குவிக்குமா?
சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழல் மாசடைவது பாதுகாக்கப்படும். எனவே சைக்கிள் ஓட்டுபவர்களை ஊக்குவிக்க, அரசு தனி சாலைகளை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்று சைக்கிளிங் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
கார்ப்பரேசன் கவனம்
சென்னையில் அன்னாநகர் மற்றும் நூறு அடி சாலையில் தற்போது சைக்கில் ஓட்டிகளுக்கு தனி பாதை அமைக்கலாம் என ஆய்வு மூலம் இடம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 6000 மாணவர்கள் பயணடைவார்கள். அதேபோல் மெரினாபீச் சாலையிலும் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனி சாலை அமைக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் மாநகராட்சி அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர்.