பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு.. அமளிக்கிடையே நிறைவேறியது
டெல்லி: பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா ராஜ்யசபாவில் பெரும் அமளிக்கு மத்தியில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அரசுப்பணியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தோருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான மசோதாவை உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்த அரசியல் சட்ட 117வது திருத்த மசோதா ராஜ்யசபாவில் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பாலான கட்சிகள் ஆதரித்த போதும், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி மட்டும் பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
2 நாட்களாக இதுதொடர்பான சூடான விவாதம் நடந்தது. நேற்று விவாதத்தின் இறுதியில், மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி பதிலளித்துப் பேசினார். அவர் பேசுகையில், அரசு உயர் பதவிகளில் எஸ்.சி, எஸ்.டியினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. இந்த குறைபாட்டை போக்க 22 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது அவசியமாகிறது என்றார்.
அதன் பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில், ஆதரவாக 206 பேரும், எதிராக 10 பேரும் வாக்களித்தனர். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த 9 பேர், சுயேச்சை எம்.பி. முகமது அதீப் ஆகியோர் மட்டுமே மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.
முன்னதாக சமாஜ்வாடிக் கட்சியினர் இந்த மசோதாவை எதிர்த்து பெரும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா சிறிது நேரம் முடங்கிப் போனது.