பள்ளியில் சண்டை: கூடப்படிக்கும் குஷ்புவை தீ வைத்து கொளுத்திய மாணவி
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவி ஒருவர் சக மாணவி ஒருவரின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் பரேலியில் இருக்கும் உயர் நிலைப்பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி ரூபாலி. அவரது வகுப்பில் படிப்பவர் குஷ்பு(18). ரூபாலிக்கும், குஷ்புவுக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று பள்ளியில் வைத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குஷ்பு ரூபாலியின் நடத்தை பற்றி ஏதோ தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ரூபாலி ஆத்திரம் அடைந்தார்.
பள்ளி முடிந்து அவரவர் வீட்டுக்கு சென்றனர். ஆனால் ரூபாலியால் பள்ளியில் நடந்ததை மறக்க முடியவில்லை. இதையடுத்து அவர் நேராக குஷ்புவின் வீட்டுக்கு சென்று அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் குஷ்புவுக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற முயன்ற குஷ்புவின் அம்மாவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயங்களுடன் குஷ்புவும், அவரது அம்மாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபாலியை கைது செய்தனர்.
பள்ளி மாணவி ஒருவர் இவ்வாறு வெறித்தனமாக நடந்து கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.