நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் தமிழக பொறியாளர் கடத்தல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாம்சன் பிரிட்டோ என்ற பொறியாளர் நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகனான தாம்சன் பிரிட்டோ, நைஜீரியவில் உள்ள ஜெர்மன் கப்பலில் பணியாற்றினார். பொறியாளரான அவர், மும்பை ஏஜென்சி நிறுவனம் மூலம் இந்தப் பணியைப் பெற்றார்.
இப்பணிக்காக கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி நைஜீரியாவின் அபிட்ஜா துறைமுகத்து சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மும்பை ஏஜென்சி நிறுவனம் தாம்சன் பிரிட்டோவின் தந்தைக்கு அதிர்ச்சி தகவலைக் கொடுத்தது.
தாம்சன் பிரிட்டோ உட்பட 5 பேரை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றிருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் தாம்சன் பிரிட்டோவின் குடும்பத்தினர் அவரை பத்திரமாக மீட்க தமிழக அரசையும் மத்திய அரசையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டனி என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிணைக் கைதியாக இருந்து வரும் நிலையில் மீண்டும் குமரியைச் சேர்ந்த ஒருவர் கடற்கொள்ளையர்களிடம் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சோமாலிய கடற்பரப்பில் மொத்தம் 43 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 28 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களாள் கடத்தப்பட்டிருக்கின்றனர்.