துரை தயாநிதியின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த கிரானைட் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு அண்மையில் மதுரை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்த அவர் தினமும் கீழவளவு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
மேலும் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.கே. செல்வராஜ் மற்றும் ரபீக் ராஜா ஆகியோரும் முன்ஜாமீன் பெற்றனர். இந்நிலையில் அந்த 3 பேரின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த புகாரில் தொடர்புடைய துரைதயாநிதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வந்தனர்.
கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த துரைதயாநிதி மீது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் விசாரணைக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்காத துரைதயாநிதி உள்ளிட்ட 3 பேருக்கு அரசு தரப்பின் வாதங்களை பரிசீலிக்காமல் மதுரை ஐகோர்ட்டு கிளை முன் ஜாமீன் வழங்கி உள்ளது. எனவே துரைதயாநிதி உள்ளிட்ட 3 பேரின் முன் ஜாமீனையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.