யாராவது சுட்டுட்டா? பயத்தில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த அமெரிக்க சிறுவன்
கியர்ன்ஸ்(அமெரிக்கா): அமெரிக்காவின் நியூடவுனில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டையடுத்து அப்படி ஏதாவது நடந்தால் தன்னை பாதுக்காத்துக்கொள்ள உடாவில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்துள்ளான்.
அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தின் கனக்டிக்கட்டில் இருக்கும் நியூடவுன் என்ற இடத்தில் சாண்டி ஹுக் என்ற துவக்கப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் பலியாகினர்.
இந்நிலையில் உடாவில் உள்ள மேற்கு கியர்ன்ஸ் பகுதியில் இருக்கும் துவக்கப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவன் நேற்று பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்துள்ளான். அவன் பையில் துப்பாக்கி இருப்பதைப் பார்த்து பயந்துபோன 2 மாணவர்கள் இது குறித்து ஆசிரியையிடம் தெரிவித்தனர்.
அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். அந்த சிறுவன் தன் துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பவில்லை. ஆனால் சக மாணவன் ஒருவனின் தலையில் துப்பாக்கியை வைத்தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிறுவனிடம் விசாரித்தபோது, யாராவது தன்னை துப்பாக்கியால் சுட்டால் தற்காத்துக் கொள்ளவே தான் துப்பாக்கி கொண்டு வந்தததாகத் தெரிவித்துள்ளான்.
பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த மாணவனின் பெயரைத் தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.