என்.டி.ராமராவ் வாழ்ந்த வீடு இடிப்பு...லட்சுமி சிவ பார்வதி கண்ணீர்
ஹைதராபாத்: ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருந்த என்.டி.ராமாராவ் வீடு வணிக வளாகம் கட்டுவதற்காக இடிக்கப்படுகிறது. ஆனால் ராமராவின் நினைவுகள் அழிக்கப்படுவதாக அவரது இரண்டாவது மனைவி லட்சுமி சிவ பார்வதி வேதனை தெரிவித்துள்ளார்.
தெலுங்குத் திரை உலகில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்தவர் என்.டி.ராமாராவ். இந்த புகழ்தான் அவரை அரசியலிலும் சாதிக்க வைத்தது. இவர் சினிமாவில் நடித்த போது சென்னையில்தான் வசித்து வந்தார். தெலுங்கு ரசிகர்களை சந்திப்பதற்காக ஹைதராபாத் நகரில் 1971ம் ஆண்டு ஒரு வீடு கட்டினார். வாம் ஒரு முறை வந்து ரசிகர்களை அந்த வீட்டில் சந்திப்பார்.
1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய அவர் பின்னர் ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். லட்சுமி சிவபார்வதியை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து 1990-ம் ஆண்டு ஹைதராபாத் அருகே உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு வீடு வாங்கினார். இந்த வீட்டில்தான் 2-வது மனைவியுடன் கடைசி காலம் வரை வாழ்ந்தார்.
என்.டி.ராமராவ் மறைவுக்கு பிறகு சிவபார்வதி அந்த வீட்டில் வசித்து வந்தார். என்.டி.ராமராவ் பயன்படுத்திய பொருட்களை அவர் நினைவு சின்னமாக பாதுகாத்து வந்தார்.
இந்த நிலையில் பஞ்சாரஹில்ஸ் வீடு தனது பெயரில் உள்ளதால் அதற்கு உரிமை கோரி அமெரிக்காவில் வசிக்கும் என்.டி.ராமராவ் இளைய மகள் உமாமகேஸ்வரி ஹைதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு வசித்து வந்த சிவபார்வதி வெளியேற்றப்பட்டார்.
இப்போது அந்த வீடு இடிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. என்.டி.ராமராவ் வசித்த வீடு இடிக்கப்படுவதை பார்த்து அவரது மனைவி சிவபார்வதி கண்ணீர் வடித்தார். என்.டி.ராமராவ் வாரிசுகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
என்.டி.ராமராவ் பெயரை சொல்லி வளர்ந்தவர்கள் இன்று அவரது நினைவு சின்னங்களை அழித்து வருகிறார்கள். பணத்துக்காக அவர் வாழ்ந்து மறைந்த வீட்டை இடிக்கிறார்கள். பணம்தான் முக்கியம் என்று அறிவித்து இருந்தால் லட்சோப லட்ச ரசிகர்கள் தங்கள் பணத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்கி நினைவு சின்னம் ஆக்கியிருப்பார்கள்.
9 குழந்தைகள் பெற்றும் ஒருவர் கூட அவரது புகழை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வழி செய்யவில்லை. அவரது நினைவுகளை அழித்து வருகிறார்கள் இவ்வாறு சிவ பார்வதி கூறியுள்ளார்.
வணிக வளாகமாக மாறிய வீடு
என்.டி.ராமராவ் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் பாகப்பிரிவினை செய்து கொடுத்து விட்டார். இதில் ஹைதராபாத்தில் உள்ள வீடு அவரது மகன் ராமகிருஷ்ணாவுக்கு கொடுக்கப்பட்டது. அதனை அவர் தெலுங்கு தேச பிரமுகருக்கு விற்றுவிட்டார். வீட்டை வாங்கியவர் அதனை இடித்து பிரமாண்ட வணிக வளாகம் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.