தலித் இளைஞர் படுகொலை: ஜி. ராமகிருஷ்ணன் கடும் கண்டனம்
சென்னை: தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்ற தலித் இளைஞன் கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என அவரது குடும்பத்தின் சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாதிய சக்திகளால் அவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஏரியின் அருகே கோபாலகிருஷ்ணனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடைபெற்ற இப்படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இப்படுகொலையைச் செய்தவர்களை உடனடியாக கைது செய்து, இத்தகைய நிகழ்வுகளுக்குப் பின்னணியாக உள்ளவர்களையும் கண்டறிந்து கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.