பாண்டியன் எக்ஸ்பிரசில் பைக்குள் பச்சிளம் குழந்தை!
மதுரை: மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வேசன் பெட்டியில் பைக்குள் பச்சிளம் குழந்தை இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையை மீட்ட போலீசார் அதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் ரயில் புறப்பட்டது. சோழவந்தான் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த ரயிலின் எஸ்,13 முன்பதிவு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. அந்த பைக்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீசாரிடம் பயணிகள் தெரிவித்தனர். அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அந்தப் பையை எடுத்து பிரித்துப் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை குளிர் காற்றால் நடுங்கி அழுது கொண்டிருந்தது. உடனே பெட்டியில் இருந்த பயணிகள் அந்தக் குழந்தையை, துணியால் சுற்றி முதலுதவி அளித்தனர்.
இதனையடுத்து திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. போலீசார், அந்த குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்டு, ரயில் பெட்டியில் பரிதவித்த நிலையில் இருந்த அந்தக் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த குழந்தையை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் இந்தக் குழந்தையை சேர்ப்பது குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.