ஆள்கடத்தல், நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
கரூர், வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தெய்வானை தம்பதியினரின் தத்துப்பிள்ளை கோகுல்(25). அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
கோவையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை பார்த்தேன். கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி வேலை முடிந்து டூவீலரில் சென்ற என்னை நடராஜன், மோகன்ராஜ், கோழிபாலு (எ) செல்வராஜ், பெரியசாமி காரில் பின் தொடர்ந்து என்னை காரில் கடத்தினர். நடராஜனின் வீட்டில் வைத்து என்னை தாக்கி, அசோக், செந்தில் பாலாஜியிடம் பேசுமாறு கூறினார்.
மொபைல் போனில் பேசிய நபர் நான் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகிறேன். உனக்கு சொத்து தேவையா, நான் சொல்கிற மாதிரி கேள். இல்லை எனில் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும், அவர்கள் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினர். 2011ம் ஆண்டு ஜூலை 7 ம் தேதி கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் என்னிடம் சில ஆவணங்களில் கையொப்பம் வாங்கினர். அதே போல வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் எனது உறவினர்களிடம் வெற்று காகிதங்களில் கையொப்பம் பெற்றனர்.
என்னை கடத்தி, துன்புறுத்தி, மிரட்டி, ஏமாற்றியதாக சம்பவங்கள் எல்லாவற்றையும் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தேன். மேலும் கரூர் ஜே.எம். 2 நீதிமன்றத்திற்கு மனுவை அனுப்பினர். அதே நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் இந்த கடத்தலில் முக்கிய பங்கு வகித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளேன்.
ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோர் பெயர்களை வழக்கில் சேர்த்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜே.எம். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணையை ஈரோட்டிற்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.