மீண்டும் தலைதூக்கிய இனவெறி: 2 இந்தியப் பெண்களை தாக்கிய ஆஸ்திரேலியப் பெண்
கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் தலையீட்டின் பேரில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையால் அங்கு இனவெறி தாக்குதல்கள் குறைந்தன. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகரில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இந்தியப் பெண்கள் பஸ்சில் ஏறி உட்கார இருக்கை தேடினர்.
அப்போது பஸ்சின் இருக்கையில் அமர்ந்திருந்த 30 வயது ஆஸ்திரேலிய பெண் பயணியின் மீது இந்திய பெண்ணின் கைப்பை இடித்தது. இதனால் ஆஸ்திரேலிய பெண் கோபம் அடைந்தார். உடனே இந்திய பெண் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
இருந்தும் ஆஸ்திரேலிய பெண்ணின் ஆத்திரம் தீரவில்லை. அவர்களை இனவெறியுடன் திட்டினார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் இந்திய பெண்ணின் கன்னத்தில் ஆஸ்திரேலிய பெண் தாக்கினார்.
உடனே, உடன் வந்த மற்றொரு இந்திய பெண் தனது செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆஸ்திரேலிய பெண் செல்போனை கீழே தள்ளிவிட்டு உடைத்தார். மேலும், நான் டாக்சியில் புறப்பட்டு செல்லும்வரை இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டினர்.
இதுகுறித்து விக்டோரியா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கடந்த சில மாதங்களாக இந்தியர்களிடம் பிரச்னை கிளப்பாமல் இருந்த ஆஸ்திரேலியர் மறுபடியும் இனவெறித்தாக்குதலை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.