இமாச்சலில் இளம்பெண் கொலை: புது காங். எம்.எல்.ஏ. கைவரிசை.. தலைமறைவு
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்வான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம் குமார் சவுத்ரி உள்பட 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இளம் பெண் ஒருவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 20ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் சோலார் மாவட்டம் தூண் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாகியிருப்பவர் ராம் குமார் சவுத்ரி. இன்னும் பதவி கூட ஏற்கவில்லை.
இந்நிலையில் பஞ்ச்குலா என்ற இடத்தில் 24 வயது பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அந்த பெண்ணை ராம் குமார் உள்பட 5 பேர் தான் கொலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராம் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ராம் குமார் தலைமறைவாகிவிட்டார். போலீசார் ராம் குமாரின் வீடு உள்பட பல இடங்களில் அவரைத் தேடினர். ஆனாலும் அவர் சிக்கவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
ராம் குமார் தனது மகளோடு தொடர்பில் இருந்ததாக இறந்த பெண்ணின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.