தீவிரமடையும் டெல்லி போராட்டம் - உள்துறை அமைச்சர் பதவி பறிப்பு?
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மாணவ-மாணவிகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் வன்முறையும் வெடித்து உள்ளது. இன்றும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே, மாணவி கற்பழிக்கப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அரிதிலும் அரிதான பாலியல் பலாத்கார வழக்குகளில் மிகவும் கடுமையான தண்டனை வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்க அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
ஆனால் அவரது பேட்டி போராட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்து விட்டதாகவும், அவர் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால்தான் போராட்டக்காரர்களை நேற்று முன்தினமும், நேற்றும் சோனியா காந்தி சந்தித்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று போராட்டக்காரர்களுடன் சோனியா காந்தி பேசிய போது, உள்துறை ராஜாங்க மந்திரி ஆர்.பி.என்.சிங் அவருடன் இருந்தார். ஆனால் சுசில்குமார் ஷிண்டே இல்லை. அதிருப்தி காரணமாக அவரை சோனியா அழைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த பிரச்சினையை ஷிண்டே கையாண்ட விதம் சோனியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.