பள்ளிகளில் தமிழிசையை பயிற்றுவிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
சென்னை: இளைஞர்களை சீரழிக்காத தமிழ் திரைப்படங்களை எடுக்கவேண்டும். பள்ளிகளில் தமிழிசையை கட்டாய பாடமாக்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றம், மக்கள் தொலைக்காட்சியுடன் இணைந்து 10ம் ஆண்டு பண்ணிசைப் பெருவிழாவை 22 மற்றும் 23ம் தேதிகளில் சென்னையில் நடத்தியது. இந்த ஆண்டு தமிழிசை விழாவிற்கு "இசையின் இசை" என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த விழாவை பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் தலைவர் டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து தலைமை உரையாற்றிய டாக்டர் ராமதாஸ், தமிழ் மொழியும், இசையும் ஆதியில் தொடங்கியது. இதை மீட்டெடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுபோன்ற இசை விழாக்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10 வகுப்புவரை தமிழிசையை பாடமாக கற்பிக்க வேண்டும். தமிழிசையை கற்பிக்க தமிழிசை கோட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும்.
பள்ளிகளில் விழாக்களில் திரைப்படப்பாடல்களைப் போட்டு ரிக்கார்டு டான்ஸ் ஆடவைக்கின்றனர். இதை விடுத்து இசைக்கச்சேரிகளை நடத்தலாம். நான் சினிமாவிற்கு எதிரியல்ல. இளைஞர்களை சீரழிக்காத குடும்பப்பாங்கான படங்களை எடுக்க முன்வரவேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்றனர். மணிமேகலை, முக்கூடற்பள்ளு ஆகிய குறுந்தகடுகளை டாக்டர் ராமதாஸ் வெளியிட டாக்டர்.சிவ சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.