சபரிமலையில் குவியும் கூட்டம்: விபத்தில் சிக்கிய பக்தர்கள்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை நிறைவு பெறுவதை ஒட்டி நாளை கோவில் நடை அடைக்கப்படுகிறது. இதனால் ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் 48 நாள் நடைபெறும் மண்டல பூஜை விழா கார்த்திகை முதல்நாள் தொடங்கியது. நாளைய தினம் மண்டல பூஜை நிறைவு பெறும் நாள் என்பதால் கடந்த இரண்டு தினங்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் 16 மணிநேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோவிலின் முன்புறமுள்ள தடுப்பு ஒன்று உடைந்தது. இதனால் பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கத்தினரும் இணைந்து நெரிசலை சரிசெய்தனர். இருப்பினும் கூட்ட நெரிசலின்போது இருமுடி அணிந்த பக்தர்கள் பலர் காயமடைந்தனர். ஏராளமானோர் மயக்கமடைந்தனர்.
மண்டல பூஜை நிறைவடைவதற்கும் சுவாமியை தரிசிக்க ஏராளமானோர் வந்திருப்பதால் 16 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.
நாளை கோவில் நடை அடைக்கப்பட்டு மகரவிளக்கு வழிபாட்டிற்காக வரும் 30ஆம் தேதி சபரிமலை கோயில் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.