மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்ட நித்தியானந்தா - ஏப்ரல் ஏடாகூடம்
ஏப்ரல் மாதத்தில் ஏகப்பட்ட பரபரப்புகள். அதில் உச்சகட்ட ஏடாகூட நிகழ்வு நித்தியானந்தாவைப் போய் இளைய ஆதீனமாக, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முடி சூட்டிய செயல்தான்.
புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் சாலை விபத்தில் மரணமடைந்தது, சட்டசபைக்குள் எம்எல்ஏக்கள், நிருபர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது, ஸ்டாலின் முன்பு தாத்தா சுப.தங்கவேலன், பேரன் ரித்தீஷ் கோஷ்டிகள் கட்டிப்புரண்டு சண்டை போட்டது ஆகியவையும் இந்த மாதத்தில் நடந்த பரபரப்பு நிகழ்வுகள்.
தமிழகத்தின் முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான என்.வரதராஜன் இந்த மாதத்தில்தான் மரணமடைந்தார். இந்தோனேஷியாவில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, தமிழகமும் அதிர்ந்தது. 28 நாடுகளில் சுனாமி பீதியும் ஏற்பட்டது. சென்னையில் சுனாமியை வேடிக்கை பார்க்க கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சுனாமிக்கே சுவால் விட்ட செயலும் இந்த மாதத்தில்தான் நடந்தது.
புதுக்கோட்டை இந்திய கம்யூ. எம்.எல்.ஏ முத்துக்குமரன் சாலை விபத்தில் மரணம்!
புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார்.
தமிழகத்தில் இன்று முதல் 'கரண்ட் பில்' ஜாஸ்தி!
மத்திய, ரயில்வே மற்றும் தமிழக பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து உயர்வுகளும் இன்று முதல் அமலுக்கு வந்தன. அதேபோல தமிழகத்தில் முக்கியமாக மின் கட்டண உயர்வும் இன்று முதல் அமலுக்கு வந்தது.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு
லாட்டரி அதிபரும் எஸ்எஸ் மியூசிக் டிவி சேனல் அதிபருமான மார்ட்டின் மீது இன்னொரு நில மோசடி வழக்கு பாய்ந்தது. சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்த அவரை வாசலிலேயே வைத்துக் கைது செய்தனர் போலீஸார்.
வலது காலை எடுத்து வைத்து மீண்டும் கார்டனுக்குள் நுழைந்தார் சசிகலா
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்தாகி விட்டதைத் தொடர்ந்து மீண்டும் போயஸ் தோட்ட வீட்டுக்குள் வந்து சேர்ந்தார் சசிகலா. அவருடன் இளவரசியும் வந்து சேர்ந்து விட்டார்.
ராமஜெயம் கொலை: தூத்துக்குடி அதிமுக பெண் கவுன்சிலரிடம் தீவிர விசாரணை!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் சாந்தி என்பவரை திருச்சி போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டாலின் முன்பு தாத்தா சுப.தங்கவேலன், பேரன் ரித்தீஷ் கோஷ்டிகள் கட்டிப்புரண்டு சண்டை!
முன்னாள் அமைச்சரான சுப.தங்கவேலன் மற்றும் அவரது பேரனான நடிகர் ரித்தீஷ் குமார் ஆகியோரின் ஆதரவாளர்கள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்பு கட்டிப்புரண்டும், சட்டையைக் கிழித்துக் கொண்டும் கடும் சண்டையில் இறங்கினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சட்டசபைக்குள் எம்எல்ஏக்கள், நிருபர்கள் செல்போன் கொண்டு வர தடை
தமிழக சட்டசபைக்குள் எம்எல்ஏக்கள், நிருபர்கள் மற்றும் அதிகாரிகள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டசபையில் இன்று சபாநாயகர் ஜெயக்குமார் வெளியிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.வரதராஜன் மரணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான என்.வரதராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
இந்தோனேஷியாவில் மிக பயங்கர நிலநடுக்கம்-தமிழகமும் அதிர்ந்தது- 28 நாடுகளில் சுனாமி பீதி
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. சென்னையில் சுனாமியைக் காண கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். கடைசியில் சுனாமி வரவில்லை.
திருமதி ஒய்ஜிபிக்கு ஒளவையார் விருது- வழங்கினார் ஜெ.
காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரான திருமதி ஒய்ஜிபிக்கு தமிழக அரசின் ஔவையார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முதல்வர் ஜெயலலிதா இன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவி்ன்போது வழங்கினார்.
இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் திமுக இடம்பெறாது: கருணாநிதி
இலங்கைத் தமிழர் நிலைமையை பார்வையிட சென்ற இந்திய எம்.பிக்களின் குழுவிலிருந்து அதிமுக வெளியேறிய நிலையில் திமுகவும் வெளியேறியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிப்பை திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று வெளியிட்டார்.
திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் ஜி.கே. மணி அனுமதி
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மரணத்திடம் தோற்ற தைரியலட்சுமி... சென்னையில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை!
படிக்க முடியவில்லை, படிப்பு புரியவில்லை, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்திற்காக தைரியலட்சுமி என்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தேமுதிகவுக்கு அங்கீகாரம்: முரசு சின்னமும் ஒதுக்கீடு
தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. முரசு சின்னமும் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆதிராஜாராம் நீக்கம்-உதயகுமார் நியமனம்
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருந்த ஆதிராஜாராம் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக உதயகுமார் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது: 80 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை!
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு 40 நாட்கள் நடைபெற்றது. கிட்டத்தட்ட 80 வருடங்களுக்குப் பின் நாட்டில் இந்த சாதிவாரி சென்ஸஸ் நடந்தது.
தமிழ்க் கட்சிகள் எதுவும் தனி ஈழம் கேட்கவில்லை -டி.கே.ரங்கராஜன்
இலங்கைக்கு நாங்கள் சென்றிருந்தபோது, அங்கு நாங்கள் சந்தித்த தமிழ் கட்சிகள், தமிழ் குழுக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் சொன்னார்கள். தனி ஈழம் வேண்டும் என்று அங்கு உள்ள எந்த தமிழ் கட்சியும் வலியுறுத்தவில்லை. தனி தமிழ் ஈழம் வேண்டும் என்றோ, தமிழ் மக்கள் பிரிந்து செல்லவேண்டும் என்ற பிரச்சினையையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் எடுக்காது என்று கூறினார் இலங்கைக்குப் போய் வந்த குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான டி.கே.ரங்கராஜன்.
புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான்-
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பென்னிகுயிக்குக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்-அடிக்கல் நாட்டினார் ஜெ.
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பெருமைக்குரியவரான ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுயிக்குக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கு இன்று முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி வைத்தார்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன்
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் அறிவித்தார்.
மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!
தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டு விழா திடீரென நடந்தது.
நேர்மையாக பணியாற்றிய கரூர் ஆர்.டி.ஓ. சாந்தி உசிலம்பட்டிக்கு திடீர் மாற்றம்
கரூர் மாவட்டத்தில் நேர்மையாக பணியாற்றிய ஆர்.டி.ஓ. சாந்தி திடீர் என்று உசிலம்பட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.