17 வயது மாணவனுடன் ஓடி பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியை... மார்ச் பரபரப்பு!
மார்ச் மாதத்திலும் பரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. அரசியல் ரீதியாகவும் சரி, சமூக ரீதியிலும் சரி பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளைக் கண்டது மார்ச் மாதம்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல்தான் இதில் உச்சகட்ட பரபரப்பு. அதிமுகவின் முத்துச்செல்வி இதில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட் இழந்தனர்.
இதை விட பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், சென்னையில் 17 வயது மாணவனை இழுத்துக் கொண்டு ஓடிய 37 வயது ஆசிரியை குமுதுதான். மார்ச் மாத ரவுண்டப் இதோ...
திருநங்கைகளுக்காக பாலியல் சுதந்திர கட்சி தொடங்கும் இப்படிக்கு ரோஸ்!
திருநங்கைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக இந்திய பாலியல் சுதந்திர கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக பிரபல திருநங்கை ரோஸ் என்கிற வெங்கடேசன் கூறினார்.
உதயக்குமார் மனைவி பள்ளியின் காம்பவுண்ட் சுவர் திடீர் இடிப்பு
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயக்குமாரின் மனைவி நடத்தி வரும் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரை சிலர் இடித்து தரைமட்டமாக்கினர்.
மறுபடியும் அதிமுகவில் சேருவேன்... எஸ்.வி.சேகர்
அதிமுகவில் தான் மீண்டும் சேரவுள்ளதாக காமெடியன் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
தம்பிதுரை மகளுக்கும், காங். மாஜி எம்.எல்.ஏ. மகனுக்கும் ரகசிய திருமணம்
அதிமுகவின் முக்கிய எம்.பியான தம்பிதுரையின் மகளுக்கும், வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மகனுக்கும் இன்று திருப்பதியில் வைத்து ரகசியமான முறையில் கல்யாணம் நடந்தது. இதில் தம்பித்துரை கலந்து கொள்ளவில்லை. இது காதல் திருமணமாகும்.
37 வயது ஆசிரியை 17 வயது மாணவருடன் ஓட்டம்
+1 படித்து வந்த 17 வயது மாணவனுடன் அவனது 37 வயது அறிவியல் ஆசிரியை குமுது காணாமல் போனார். சென்னையை பெரும் பரபரப்பி்ல ஆழ்த்தியது இந்த சம்பவம். பின்னர் இருவரையும் போலீஸார் பிடித்தனர். குமுது கைது செய்யப்பட்டார்.
நெல்லையிலிருந்து சிங்களப் பேராசிரியை வெளியேற்றம்
நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட சிங்களப் பேராசிரியை ஜீவா நிரியல்லா, ஈழத்தில் நடந்த போரின்போதும் சரி பின்னரும் சரி தமிழ்ப் பெண்கள் யாருமே சீரழிக்கப்படவில்லை, பலாத்காரம் செய்யப்படவில்லை, கொடுமைப்படுத்தப்படவில்லை என்று பேசியதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
டாக்டர் ராமதாஸை 4 மணி நேரம் விசாரித்த சிபிஐ
திண்டிவனத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிடமும், அவரது உதவியாளர் நடராஜனிடமும் நான்கு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இந்தத் தகவலை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை.
திண்டுக்கல்லில் எண்கெளன்டர்: கேரள ரவுடி சுட்டுக் கொலை-ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!
திண்டுக்கல் விடுதியில் தங்கியிருந்த ஒரு கூலிப்படைக் கும்பலைப் பிடிக்க போலீஸார் கடும் சண்டையில் இறங்கினர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவன் கொல்லப்பட்டான். அவன் கேரளாவைச் சேர்ந்தவன். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.
விஜயகாந்துக்கு 'டோஸ்' விட்ட விவசாயி!
சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும், விவசாயி ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகா அமைதியாக முடிந்தது சங்கரன்கோயில் இடைத் தேர்தல்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்தது.
கூடங்குளத்தில் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் பணிகள் துவக்கம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு பணிகள் துவங்கிகின. 300 ஊழியர்களும், ரஷ்யி விஞ்ஞானிகளும் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். திமுக, தேமுதிக, மதிமுக என மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
பிரபாகரன் போராட்டம் சரியானதே, சகோதர சண்டைதான் ஈழம் அமைவதைக் கெடுத்தது - கருணாநிதி
தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மிகப் பெரிய அணுமின் உற்பத்தி மையமாக கூடங்குளம் உருவாகும்: கலாம்
கூடங்குளம் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக உலகில் அடையாளம் காட்டப்படும் என்று முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்தார்.
மிடாஸ் மோகன் கைது
சசிகலா தரப்பைச் சேர்ந்த முக்கியமானவர்களில் ஒருவரான மிடாஸ் மோகன் கைது செய்யப்பட்டார். இவர் மிடாஸ் மதுபான ஆலையின் நிர்வாகி ஆவார்.
ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைந்தார் சசிகலா
ஜெயலலிதாவுக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் எனக்கும் எதிரிகளே, என்று திடீர் அறிக்கை வெளியிட்டு மீண்டும் ஜெயலலிதாவுடன் அதிரடியாக இணைந்தார் சசிகலா. அதிமுகவினர் அத்தனை பேரும் உறைந்து போனார்கள்.
ஓய்வு பெற்றார் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண்!
தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியான லத்திகா சரண் இன்று பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சசி மீதான நடவடிக்கையை ரத்து செய்தார் ஜெயலலிதா
உடன்பிறவா சகோதரி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிக்கை மூலம் தெரிவித்தார்.