வைஷ்ணவியை தாக்கிய நித்தி ஆதரவாளர்கள்.. 'ஹாட்' சம்பவங்களைக் கண்ட மே!
கடந்த நான்கு மாதங்களைப் போலவே மே மாதத்திலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அரசியல் முதல் அரசு நிர்வாகம் வரை பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை.
நித்தியானந்தா விவகாரம்தான் இந்த மாதத்திலும் மேலோங்கியிருந்தது. கூடவே மதுரை கலெக்டராக இருந்த சகாயம் மாற்றப்பட்டது, எஸ்.பி.அஸ்ரா கார்க் மாற்றப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு திமுக ஆதரவு கொடுத்தது, ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா கேஸ் போட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை ஆதீனத்துக்கு 10 நாள் 'டைம்'!
இன்னும் 10 நாட்களுக்குள் நித்தியானந்தாவுக்குக் கொடுக்கப்பட்ட பதவியை மதுரை ஆதீனம் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளை தொடங்குவோம் என்று 13 மடாதிபதிகள் மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
--
மதுரை அண்ணா நகர் பகுதியில் ஒரு தியேட்டர் அருகேயுள்ள திருமண மகாலின் பின்புறம் உள்ள ராமர் கோவிலுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.
ஆதீனங்கள் மீதும் வழக்கு... நித்தியானந்தா மிரட்டல்!
தருமபுர ஆதீனம் உள்ளிட்ட எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் அனைவர் மீதும் மான நஷ்ட ஈடு கோரி பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள் வழக்குத் தொடருவார்கள் என்று நித்தியான்தா கூறினார்.
நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்ததற்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இது தொடர்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பிரணாப் முகர்ஜிக்கு திமுக ஆதரவு
குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிப்போம் என்று திமுக கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
நித்தியானந்தாவை ஆதரிக்கவில்லை-சங்கர மடம்
நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவித்த செயலை காஞ்சி சங்கர மடம் ஆதரிக்கவில்லை. இதுதொடர்பாக நித்தியானந்தா கூறியிருப்பது தவறான தகவல் என்று காஞ்சி சங்கர மடம் தெரிவித்தது.
வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்
மதுரை ஆதீனத்தின் செயலாளராக கூறப்படும் வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி சுடிதாரை கிழித்து விட்டதாக பரபரப்புத் தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மதிமுகவும் போட்டியிடவில்லை
இடைத்தேர்தல்களில் நடைபெறுகின்ற அநீதியை, ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காக புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.
மதுரையில் பாஜக மாநில மாநாடு
மதுரையில் திராவிடக் கட்சிகளுக்கு நிகராக பாஜக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாமரைச் சங்கமம் என்ற பெயரிலான மாநில மாநாடு இன்று தொடங்கியது. மூத்த தலைவர் அத்வானி, நிதின்கத்காரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முன்னோடித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயேந்திரர் மீது ரஞ்சிதா அவதூறு வழக்கு!
நித்தியானந்தா எப்போதும் ரஞ்சிதா என்ற பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரை மதுரை ஆதீனமாக நியமித்தது தவறு என்று ஸ்டேட்மென்ட் விட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா அவதூறு வழக்கு பதிவு செய்தார்.
சிரஞ்சீவி மருமகனின் சென்னை வீட்டில் ரெய்ட்!
நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் சிரிஷ் பரத்வாஜின் சென்னை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஆதீன மடத்திற்குள் நுழைய முயன்ற ஆதீன மீட்புக் குழுவினர்
நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைந்து வழிபாடு நடத்த முயன்ற ஆதீன மீட்புக் குழுவினரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
கலப்பு திருமணம் செஞ்சா வெட்டி தள்ளுங்க...காடுவெட்டி குரு
கலப்புத் திருமணம் செய்வோரை வெட்டித் தள்ளுங்க என்று பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜெ.வை சந்தித்தார் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன்!
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
ஜெ. படம் விவகாரம்: விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!
ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.
என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள போலீஸ் திட்டம்-நடராஜன் பீதி
என்னை போலியான என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறி ஒரு மனுவை சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சசிகலாவின் கணவர் நடராஜன் தாக்கல் செய்தார்.
மதுரை கலெக்டர் சகாயம் திடீர் இடமாற்றம்!
மதுரை மாவட்ட கலெக்டராக செயல்பட்டு வந்த சகாயம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க்கும் இடமாற்றம்
மதுரை கலெக்டர் சகாயத்தைத் தொடர்ந்து புறநகர் எஸ்.பியாக இருந்த அஸ்ரா கார்க்கையும் அரசு திடீரென மாற்றியது.