ரூ 27 லட்சம் பணமோசடி: திமுக பிரமுகர் ஒச்சுபாலு திடீர் கைது
மதுரை: மதுரை அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 27 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தி.மு.க. பிரமுகர் ஒச்சுபாலுவை போலீசார் கைது செய்தனர்.
மதுரை 3-ம் பகுதி தி.மு.க. செயலாளராக இருப்பவர் ஒச்சுபாலு. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த வீரசேகரன் என்பவருக்கு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 15 லட்சமும், சிவகங்கை மாவட்டம் கீழயடி பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் மகன் சுப்பிரமணியிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் வாங்கியதாகவும், மதுரையை சேர்ந்த பால் ராஜ் மகன் அரியமுத்து (25) என்பவரிடம் மாநகராட்சியில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சமும் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆட்சியும் மாறிவிட்டது. வேலையும் கிடைத்தபாடில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஒச்சுபாலு காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதைத்தொடர்ந்து தங்களை ஒச்சுபாலு மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.எஸ்.காலனி போலீசில் 3 பேரும் புகார் செய்தனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒச்சு பாலுவை நேற்றிரவு கைது செய்தனர்.