கூடங்குளம், கல்பாக்கம், என்எல்சி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே தர ஜெ. கோரிக்கை
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு ஒருகடிதம் அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பாவது:
தமிழகம் தற்போது கடுமையான மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகா வாட் என்ற அளவில் இருக்கும் போது, தற்போது தமிழகத்துக்கு 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் துவங்கப்பட உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் 2000 மெகாவட் மின்சாரமும் முழுவதுமாக தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது.
அதாவது, ஆந்திராவில் துவக்கப்பட்ட சிம்ஹாத்ரி மின்சார உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியான 1000 மெகா வாட் மின்சாரம் முழுவதும் ஆந்திராவுக்கே வழங்கப்பட்டது. அதேப்போல, கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வழங்கப்பட வேண்டும்.
அதேபோல, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையம், நெய்வேலி அணல் மின் கழகம், வல்லூர் மின் நிலையம் ஆகியவற்றில் உற்பத்தியாகும் 2830 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே தற்காலிகமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடைக்கால நடவடிக்கையை துரித கதியில் மேற்கொள்ள பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தின் மின் தேவை வெகுவாகக் குறைந்து மக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வழி பிறக்கும்.
பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதி என்று மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. அதை நிறுத்தி தமிழக மக்களுக்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.