2012 ஹைலைட்ஸ்: கசாப் தூக்கு: மக்களுக்கு மத்திய அரசின் சர்பிரைஸ்
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெறித் தாக்குதலை நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து கசாப் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினான். முதலில் அவனது தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம் அதன் பிறகு அவனது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவன் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தான். அதுவும் நிராகரிக்கப்பட்டதையடுத்து கசாப் கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடப்பட்ட சில மணிநேரத்திலேயே அவனது உடல் சிறை வளாகத்தில் புதைக்கப்பட்டது.
அவன் மரணச் செய்தி கேட்ட மும்பை மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களோ கசாப் தூக்கு செய்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்நிலையில் கசாப் மரணத்திற்கு பழிவாங்க இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்தது.
கசாபை பாதுக்காக ரூ. 53 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால் அவனை தூக்கிலிட அரசுக்கு ரூ.5,000 செலவானது என்பது குறிப்பிடத்தக்கது.