காதல், காமம், கல்யாணம், பணம்.. கல்யாண ராணியின் லீலைகள்.. ஆகஸ்ட் அதகளம்!
ஆகஸ்ட் மாதத்தை அதகளப்படுத்தியது கேரள இளம் பெண் ஷானாஸின் கல்யாண மோசடி லீலைகள்தான். 50க்கும் மேற்பட்டோரை மணந்து மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்பட்டார் ஷானாஸ். ஆனால் பின்னர் அவர் கைதானபோது 4 பேரை மட்டுமே அவர் மணந்ததாக தெரிய வந்தது.
மதுரை கிரானைட் மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மீது இந்த மாதத்தில்தான் வழக்குப் பாய்ந்தது. அவரும் தலைமறைவானார்.
டெசோ மாநாடு பெரும் பரபரப்புக்குப் பின்னர் சென்னையில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி, டிவிட்டர், பேஸ்புக்கில் நுழைந்தார். புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கினார்.
கிரானைட் முறைகேடு: மு.க. அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு
மதுரையில் அரசு குவாரியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததற்காக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வேலூர் சிறையில் ஜேப்பியார்
கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்து 10 வட மாநிலத் தொழிலாளர்கள் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் ஜேப்பியார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விஜயகாந்த் மீது கொலை மிரட்டல் புகார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் வீட்டிலிருந்து வெளியேற மிரட்டப்பட்டதாக கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தியின் கணவர் இன்று காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.
ஐ.நா. மூலம் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துக- டெசோ தீர்மானம்
இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிவிட்டர், பேஸ்புக்கில் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி தனது டிவிட்டர் கணக்கைத் தொடங்கினார். அடுத்து பேஸ்புக்கிலும் அவர் நுழைந்தார்.
ஈமு கோழி விளம்பரம் சத்தியராஜ், சரத்குமார் மீது வழக்குப் பதிவு
ஈமு கோழி வளர்ப்பு விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகர்கள், சத்தியராஜ், சரத்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விஜயகாந்த் சொந்தக்காரப் பெண் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்
அதிமுக தரப்புக்குப் போக ஆள் சேர்ப்பதாக கூறி தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்ட, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண்மணியான சங்கீதா சீனிவாசன், இன்று திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார்.
18 வயசைத் தொட்ட செல்போன்
இந்தியாவில் செல்போன்கள் எனப்படும் மொபைல் போன்கள் அறிமுகமாகி இன்றுடன் 17 ஆண்டு முடிந்து, 18வது ஆண்டு பிறந்தது.
காதல்.. காமம்.. கல்யாணம்.. பணம்... கல்யாண ராணியின் லீலைகள்
தமிழகம் மற்றும் கேரளாவில் அழகு ராணியாக வலம் வந்து கல்யாண மகாராணியாக உருமாறி பல இளைஞர்களை தவிக்க வைத்த அழகி ஷானாஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்தடுத்து பலரைக் கல்யாணம் செய்து பண மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்பட்டார் ஷானாஸ். ஆனால் பின்னர் கைதானபோது இதை அவர் மறுத்தார். நான்கு பேரை மட்டுமே மணந்ததாகவும் அவர் கூறினார்.
ஜியோன் பள்ளி தாளாளர் விஜயன், ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னையில் ஜியோன் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பரிதாபமாக சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளர் விஜயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதேபோல ஜேப்பியார் என்ஜீனியரிங் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜேப்பியாருக்கும் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது.