தலித்கள் மீது தாக்குதல்.. வெள்ளைத்துரையின் என்கவுண்டர்..நடுங்க வைத்த நவம்பர்
நவம்பர் மாதம் திகில் மாதமாக மாறிப் போனது இந்தஆண்டு. ஆண்டின் மாதத்தின் முதல் நாளிலேயே கோவை சிறார்கள் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது கோவை கோர்ட். மாதத்தின் கடைசி நாளில் வெள்ளைத்துரையின் அதிரடி என்கவுண்டரில் 2 குற்றவாளிகள் போட்டுத் தள்ளப்பட்டனர்.
தர்மபுரியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வெறியாட்டம்தான் நவம்பர் மாதத்தின் மிகப் பெரிய கொடுமைச் சம்பவமாகும். இந்த சம்பவத்திற்குக் காரணம் ஒரு காதல் திருமணம் என்பதுதான் வேதனையான விஷயம்.
திமுகவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கி வந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவு அக்கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டு மறைந்தது இந்த மாதத்தில்.
கோவை: சிறுவர்கள் கொலை வழக்கு - மனோகரனுக்கு மரண தண்டனை
கோவை பள்ளிக் குழந்தைகள் முஸ்கான் மற்றும் அவளது தம்பி ரித்திக் ஆகியோரைக் கடத்திச் சென்று முஸ்கானை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தும், பின்னர் அக்காள், தம்பியை ஆற்றில் தள்ளி விட்டுக் கொலை செய்த வழக்கில், மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கைதான இன்னொரு முக்கியக் குற்றவாளியான மோகன்ராஜ் ஏற்கனவே போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
சர்ச்சைக்குரிய தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் சென்னைக்கு மாற்றம்
சர்ச்சைக்குரிய ஐஜி ராஜேஷ் தாஸ் தென் மண்டல ஐஜி பொறுப்பிலிருந்து, சென்னை கூடுதல் காவல்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். முல்லைப் பெரியாறு, கூடங்குளம், பரமக்குடி கலவரம் என பல சர்ச்சை சம்பவங்களில் இவரது பெயர் பெரிதாக அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரியில் தலித்கள் மீது கொலை வெறித் தாக்குதல்
தர்மபுரி மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததையடுத்து நாயக்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய 3 கிராமங்களில் உள்ள தலித் கிராமங்கள் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. தலித்களின் வீடுகள், உடமைகள் சூறையாடப்பட்டன, தீயிட்டு கொளுத்தப்பட்டன.
மானாமதுரை டிஎஸ்பி ஆனார் 'என்கவுண்டர்' வெள்ளத்துரை
தென் மண்டல ஐ.ஜியாக அபய் குமார் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதே போல மானாமதுரை டி.எஸ்.பியாக 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
திமுக எம்.பி. ஜேகே ரித்தீஷ் சென்னையில் கைது
நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 கோடி வாங்கி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் திமுக எம்.பி.யும், நடிகருமான ஜே.கே. ரித்தீஷ் இன்று கைது செய்யப்பட்டார்.
ஜெ. குறித்து அவதூறு பேச்சு - மேட்டூர் தேமுதிக எம்எல்ஏ கைது!
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதுறாகப் பேசியதாகக் கூறி தேமுதிக மேட்டூர் தொகுதி எம்எல்ஏ பார்த்திபன் கைது செய்யப்பட்டார்.
காவிரி: ஷெட்டருடன் பெங்களூரில் ஜெயலலிதா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!!
காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
எஸ்.ஐ. ஆல்வின்சுதன் கொலைக் குற்றவாளிகள் பாரதி, பிரபு என்கவுன்ட்டரில் கொலை
மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் குத்திக் கொல்லப்பட்ட வழக்கின் பிரபு, பாரதி ஆகியோர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.