'ஐயா, ஆர்க்காட்டாரே.. எங்களை மன்னிச்சிருங்க'.. அக்டோபர் 'அலப்பறை'!
அரசியல் ரீதியாக ஏகப்பட்ட பரபரப்புகளை தமிழகம் இந்த அக்டோபர் மாதம் கண்டது. அமைச்சர் சி.வி.சண்முகம் பதவியை இழந்தார். கருப்புச் சட்டைப் போராட்டத்தை திமுக நடத்தியது. கருணாநிதியும் சில நாட்களுக்கு கருப்புச் சட்டைக்கு மாறிக் கலக்கினார்.
தலைமறைவாக இருந்து வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் மனைவி அனுஷாவை அழைத்துப் போலீஸார் விசாரணை நடத்தினர். புதிய சபாநாயகராக தனபால் பதவியேற்றார். மோசடி மன்னன் அப்ரோ ஏசுதாஸ் பிடிபட்டார்.
இந்த மாதத்தை மறக்க முடியாத மாதமாக்கி மாத்தின் கடைசி நாளில் சென்னை மாநகரை பெரும் பீதிக்குள்ளாக்கி பத்திரமாக கரையைக் கடந்தது நிலம் புயல்.
சி.வி.சண்முகத்தின் அமைச்சர் பதவி - கட்சி பதவி பறிப்பு
இன்று காலை விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகத்தை நீக்கிய முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகலில் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். புதிய அமைச்சராக மோகன் அறிவிக்கப்பட்டார்.
கருப்புச் சட்டைக்கு மாறிய கருணாநிதி!
திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் ரத்தாகி, கருப்புச் சட்டை அணியும் போராட்டம் அறிவிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு அறிவாலயம் வந்தார். கருணாநிதி கருப்புச் சட்டைக்கு மாறியது பெரிய செய்தியானது. சில நாட்கள் இதே உடையில் வலம் வந்த கருணாநிதி பின்னர் மீண்டும் வெள்ளைச் சட்டை, மஞ்சள் துண்டுக்கு திரும்பி விட்டார்.
துரை தயாநிதி மனைவி அனுஷாவுக்கு போலீஸ் சம்மன்
மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் இருப்பிடம் தொடர்பாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தினர். அதே போல துரை தயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீத்தாராமன் உள்பட 3 பேருக்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.
தலைமை கொறடாவாக வைகை செல்வன் நியமனம்
தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக வைகை செல்வன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். இவர் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ ஆவார்.
19-வது சபாநாயகரானார் தனபால்
தமிழக சட்டசபை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க இன்று காலை தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட பி.தனபால் போட்டியின்றியும், ஒருமனதாகவும் தமிழக சட்டசபையில் 19வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
'அப்ரோ யேசுதாஸ்' பிடிபட்டார்!
ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அப்ரோ நிறுவனர் யேசுதாஸ் பெங்களூரில் சிக்கினார்.
வீரபாண்டி ஆறுமுகம் மீ்தான குண்டாஸ் செல்லாது - உயர்நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்யானந்தா நீக்கம்
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்தியானந்தாவை நீக்கினார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். மேலும் அவரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸில் ஒரு புகாரையும் கொடுத்தார்.
'ஐயா... ஆர்க்காட்டாரே.. எங்களை மன்னிச்சிருங்க!'
திமுக ஆட்சியின்போது பெரிய அளவில் மின்தடை இல்லாமல் இருந்ததற்காக தமிழக மக்கள் சார்பில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமிக்கு பெரிய பேனர் வைத்து திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது ஒரு தரப்பு.
ஹைதராபாத் ஐபிஎல் அணி... ஏலத்தில் கைப்பற்றியது சன் டிவி
ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய அணியை சன் டிவி குழுமம் இன்று வாங்கியுள்ளது.
ஜெ.வை நேரில் சந்தித்து 2 தேமுதிக எம்.எல்.ஏக்கள் திடீர் பாராட்டு!!!
மதுரை மத்திய தொகுதி சுந்தரராஜன் மற்றும் திட்டக்குடி தமிழழகன் ஆகிய இரு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை இன்று காலை திடீரென நேரில் சந்தித்துப் பேசினர். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டும் தெரிவித்தனர். தேமுதிக வட்டாரம் இந்த இரு எம்.எல்.ஏக்களின் செயலால் பெரும் அதிர்சசியில் மூழ்கியது.
'கேப்டன்' விஜயகாந்த்தின் 'நாய்' பேச்சு!
தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சென்னை விமான நிலையத்தில் நாயே நாயே என்றும், அடிச்சுடுவேன் என்றும் கூறி சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்தார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த். விஜயகாந்த் உடன் வந்த தேமுதிக எம்.எல்.ஏ. தாக்கியதில் மூத்த பத்திரிகையாளர் பாலு காயமடைந்தார்.
--
விஜயகாந்த் இப்படி ஒரு பக்கம் ஆவேசம் காட்ட, மறுபக்கம் அவரது கட்சியின் மேலும் இரு எம்.எல்.ஏக்களான நடிகர் அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பரபரப்பை மேலும் கூட்டினர்.
திருப்பாசேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் படுகொலை
மருதுபாண்டியர் குருபூஜையின்போது திருப்பசேத்தி சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதனை ஒரு கும்பல் சுற்றி வளைத்துக் கொடூரமாக படுகொலை செய்தது.
ராஜ்குமார் கடத்தல் வழக்கு... வீரப்பன் மனைவி முத்துலட்சுமி விடுதலை
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னையை பயமுறுத்திய நிலம் புயல்
தமிழக கடலோர மக்களை குறிப்பாக சென்னை மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கிய நிலம் புயல் மகாபலிபுரம் அருகே இன்று மாலையில் கரையை கடந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் கடற்கரை பகுதிகளை யொட்டிய இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான உயிர்ச்சேதம் எதுவும் இந்தப் புயலால் ஏற்படவில்லை.