நெல்லை மாவட்டத்தில் மர்மகாய்ச்சலுக்கு 6 மாத கர்ப்பிணி பலி
நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கடையநல்லூர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவியது. இந்த மர்ம காய்யச்சலுக்கு பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அரசு துரித நடவடிக்கை எடுத்து காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மர்ம காய்ச்சல் தலை தூக்கியுள்ளது.
சேரன்மகாதேவி, முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணராஜா. அவரது மனைவி நவநீதகிருஷ்ணம்மாள். ஆறு மாத கர்ப்பிணி. சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காய்ச்சல் தீவிரமடைந்ததால் அவர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவருக்கு திருமணமாகி ஏழு மாதம் தான் ஆகியுள்ளது. தற்போது அவர் இரட்டை குழந்தைகளை வயற்றில் சுமந்த நிலையில் மர்ம காய்ச்சல் தாக்கி இறந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.