இணையதளங்களில் ஆபாசபடங்களை தடை செய்யுங்கள்: ஞானதேசிகன் கோரிக்கை
சென்னை: இணையதளங்களில் ஆபாச படங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 128-வது ஆண்டு தொடக்கவிழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தேசிய தலைவர்கள் உருவ படங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கூட்டத்தில் தன்னை 10 நிமிடம்தான் பேச அனுமதித்தார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்வது தவறான குற்றச்சாட்டு. கூட்டத்தில் தமிழக முதல்வரை தனிமைப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ இல்லை. அவரது கருத்து ஏற்புடையது அல்ல. மத்திய அரசை பொருத்த மட்டில் எந்த அளவு நிதி ஆதாரம் தர முடியுமோ அதைவிட அதிகமாகத்தான் அளித்து வருகிறது. ஊரகத் துறைக்கு பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தென் மாநிலங்களுக்கு ஒதுக்கும் மின்சாரத்தில் 33 சதவீதம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. வல்லூரில் 347 மெகாவாட் மின்சாரம், மேட்டூரில் 600 மெகாவாட் மின்சாரம், வட சென்னையில் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு பணிகள் நடந்து வருகிறது. செய்யூரில் அல்ட்ரா மெகா பிராஜக்ட் புதிதாக தொடங்கப்பட உள்ளது.
டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள் பெரிது படுத்தியதால் விசுவரூபம் எடுத்து உள்ளது. இது போன்ற சம்பவம் எல்லா மாநிலத்திலும் நடக்கிறது. ஆபாச திரைப்படங்களுக்கு தடைவிதிப்பது போல் இணைய தளத்திலும் ஆபாச காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூலம் ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுவினால் சமூகம் சிரழியும் 2013-ஆம் ஆண்டு மதுக்கடைகளை மூடக் கோரி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.