நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம்- தமிழ்நாடு எதிர்ப்பு- கர்நாடகா ஆதரவு
டெல்லி: மாநிலங்களிடையே ஓடும் நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலம் ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நீர் வள கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் பங்கேற்று பேசுகையில், நதி நீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க மத்தியில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தேசிய நீர் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த யோசனையை தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது. நதி நீர்ப் பிரச்னைகளை விசாரித்து தீர்வுகாண ஏற்கெனவே தீர்ப்பாயங்கள் உள்ளன. இந்த நிலையில் நிரந்தர தீர்ப்பாயம் அமைப்பது நடைமுறைக்கு பொருந்தாது; உரிய பலனை கொடுக்காது.
தமிழ்நாட்டின் 80 சதவீத நீர் வளம் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையை நம்பியே உள்ளது. மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அரசின் வரைவு தேசிய நீர் கொள்கை உள்ளது.
மாநிலங்களிடையே ஓடும் நதி நீரைப் பங்கிடுவதில் நிலவும் பிரச்னையால் தாழ்வான மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது. அதற்கு தகுந்தவாறு தேசிய நீர்க் கொள்கை மாற்றப்பட வேண்டும்.
தேசிய அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளை நீக்க வேண்டும். மாநிலங்களிடையிலான நதி நீர்த் திட்டங்களில் இடம்பெற்றுள்ள நதி நீர்ப் பகிர்வு உடன்படிக்கைகள், நடுவர்மன்ற தீர்ப்புகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும்.
தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கக்கூடாது: தண்ணீரை வர்த்தக பொருளாக கருதி அதற்கு விலை நிர்ணயிப்பதா வேண்டாமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான விலையை மத்திய அரசு நிர்ணயித்தால் மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாக கருதப்படும். தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கும் நடவடிக்கை சமூகத்தில் அமைதியை கெடுக்கும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் பேசிய கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், நதி நீர் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று கூறியுள்ளார்.