மின்வெட்டு: நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளிப்பார்கள்- ஸ்டாலின்
தூத்துக்குடி: திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றியிருந்தால் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் மீளவிட்டானில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தலைமை தாங்கினார். அதில் ஸ்டாலின் பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது உண்மைதான். அதை ஒரு போதும் நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் மின்வெட்டை எப்படி சமாளித்தோம் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு உரிய முறையில் அறிவிப்பை வெளியிட்டோம்.
இருப்பினும் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரிய தோல்வியை சந்தித்தது. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மக்கள் அதிமுகவை ஆட்சியில் அமர செய்தனர்.
ஆனால் மாற்றத்தை ஏற்படுத்திய மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றத்தை அளித்து வருகிறார்.
அதிமுக ஆட்சியில் இதுவரை புதிதாக மின் உற்பத்தி எதுவும் செய்யப்படவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7 மின் திட்டங்களில்தான் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இதனால்தான் மின்வெட்டு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இதைத்தான் வலியுறுத்துகிறார்.
1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய திட்டங்கள் மூலம் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அ.திமுக ஆட்சியில் எந்த மின் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி இருந்தால் தமிழகத்தில் தற்போது மின்வெட்டே இருந்திருக்காது. வரும் நாடாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் இதற்கு சரியான தீர்ப்பை அளிப்பார்கள் என்றார்.