கர்நாடகா காங்கிரசில் கலகக் குரல்- தலைவர் பதவி இல்லையெனில் கட்சி தாவல்- லிங்காயத்துகள் போர்க்கொடி!
பெல்லாரி: கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை லிங்காயத்துகளுக்கு கொடுக்காவிட்டால் வேறு அரசியல் கட்சியில் இணைந்துவிடுவோம் என்று அக்கட்சிக்குள்ளேயே கலகக் குரல் எழுந்துள்ளது.
பெல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் சாமனூர் சிவசங்கரப்பா, லிங்காயத்துகளில் ஒருவரை கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி அடுத்த வாரம் லிங்காயத்து தலைவர்கள் டெல்லி செல்ல இருக்கிறோம்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் லிங்காயத்துகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நிர்வர்த்தி செய்ய வேண்டிய தருணம் இது. தற்போதைய தலைவர் பரமேஸ்வராவை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியில் இருந்து லிங்காயத் சமூகத் தலைவரான எதியூரப்பா விலகி கர்நாடகா ஜனதா கட்சியைத் தொடங்கியுள்ளார். இதனால் வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்ற கனவில் இருந்து வருகிறது. இதனால்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். கிருஷ்ணாவும் பதவி விலகி காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஆனால் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணாவை நியமித்தால் தாங்கள் வேறு கட்சியில் இணைவோம் என்று காங்கிரஸ் கட்சியின் லிங்காயத்து தலைவர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
ஆனால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்தால் எதியூரப்பாவின் கட்சியில் லிங்காயத்து தலைவர்கள் இணையக் கூடும். அப்படி இணைந்தால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா சமூகத்துக்கும் லிங்காயத்து சமூகத்துக்குமான போட்டியான உருமாறக் கூடும் என்று கூறப்படுகிறது.