இவர்களெல்லாம் வாழவே தகுதியில்லாதவர்கள்... கற்பழிப்பு குற்றவாளிகள் குறித்து பிரதீபா பாட்டீல்
டெல்லி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி உயிரிழந்த மாணவி குறித்து பிரதீபா பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த செயல் மிகவும் கொடுமையானது, அதிர்ச்சிகரமானது, கண்டனத்துக்குரியது. இந்த செயலையச் செய்த யாருமே வாழத் தகுதியவற்றவர்கள். அவர்களுக்கு உயிர் வாழ்வதற்கு உரிமையே கிடையாது.
மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம் இது. என்னைப் பொறுத்தவரையில் இந்த செயலில் ஈடுபட்ட யாருமே வாழும் உரிமையில் இல்லை. அவர்கள் வாழக் கூடாது.
தூக்குத் தண்டனை குறித்து பல்வேறு விவாதங்கள் இருக்கலாம். ஆனால் அரிதிலும் அரிதான சம்பவங்களில் தூக்குத் தண்டனை கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் சமூ்க அளவிலும், காவல்துறையினரின் மனதளவிலும் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். குறிப்பாக ஆண்களின் மனோபாவம் முற்றிலும் மாற வேண்டும். பெண்கள் குறித்த அவர்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் தேவை. அப்போதுதான் இதுபோன்ற தீய செயல்களை நாம் முற்றிலும் தடுத்து நிறுத்த முடியும் என்றார் அவர்.