லோக்சபா தேர்தல்: 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு கைப்பற்ற அதிமுக செயற்குழு தீர்மானம்
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கி வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அதிமுக ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை அதிமுக கூட்டியுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாருவெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையிலும் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும் இக்கூட்ட்டங்கள் நடைபெறுகிறது.முதலில் செயற்குழு கூட்டமும் அதன்பிறகு பொதுக்குழு கூட்டமும் நடத்தப்படுகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இதற்கு வசதியாக ஏற்கனவே அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அதன்படி வந்துள்ளனர்.
செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் வானகரம் திருமண மண்டபம் வரை சாலையில் இரு புறமும் வரவேற்பு பேனர்களும், கொடி தோரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.
செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் டெல்லியில் தேசிய வளர்ச்சி கவுன்சில் அவமதித்ததற்கு கண்டனம், மருத்துவக் கல்வி நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பன உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.