ஆன்மீகம் பற்றியும் பள்ளிகளில் சொல்லிக் கொடுங்கள்-அத்வானி கோரிக்கை
வர்க்கலா, கேரளா: துறவிகள், மத குருமார்கள் சொல்லிச் சென்றதை நாம் இன்றைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டியது கடமையாகும். எனவே பள்ளிப் பாடத் திட்டத்தில் மதங்கள் குறித்தும், மத நெறிமுறைகள் குறித்தும் பாடம் சேர்க்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
கேரள மாநிலம் வர்க்கலாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், நாராயண குரு போன்ற ஆன்மீகத் தலைவர்கள் மக்களுக்காக நிறைய சொல்லியுள்ளனர். அந்தக் கருத்துக்களையெல்லாம் பள்ளிப் பிள்ளைகளுக்கு நாம் போதனை மூலம் தெரிவிக்க வேண்டியது கடமையாகும். அதேபோல ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் குறித்தும் பள்ளிப் பிள்ளைகள் அறிய வேண்டியது அவசியமாகும்.
வெறுமனே போர்க்கதைகள் குறித்தும், ஆட்சியாளர்கள் குறித்தும், மன்னர்கள் செய்த சாகசங்கள் குறித்தும் பிள்ளைகளுக்குப் போதித்தால் போதாது. அதைத் தாண்டி ஆன்மீகத்தையும், ஆன்மீகவாதிகளைப் பற்றியும் சொல்ல வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலா ரவியும் கலந்து கொண்டார்.