சென்னையில் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி: நால்வர் கவலைக்கிடம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த பசிருல்லாகான், இன்று காலை சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்த போது, சிலிண்டர் வெடித்தது. இதன் காரணமாக, முதல் மாடியில் இருந்த அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில், வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்த தேன்மொழியனும், அவரது மகனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதேபோல, பசிருல்லா கானும் உயிரிழந்தார்.
பலர் கவலைக்கிடம்
இந்த விபத்தில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த இலியாஸ், அவரது மனைவி ஃபரீதா, மகள் ரியானா ஆகியோரும் படுகாயமடைந்தனர். உயிரிழந்த தேன்மொழியனின் மனைவி ஜோதி, மகள் மதுமிதா, பசிருல்லாகானின் மனைவி குர்ஷிதாவும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேலும் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து காஸ் கசிவு காரணமாக ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் கேஸ் ஏஜென்சியினரின் அலட்சியமே விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்க காரணமாக அமைந்துவிட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.