மதுரை ஏர்போர்டுக்கு வெளியே துப்பாக்கியை வீசிச் சென்ற ரஷ்ய பயணி: பரபரப்பு
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் புதரில் ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவர் துப்பாக்கியை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யர் ஒருவர் தனது காதலி ஓல்கா செரன்யாக்குடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். அவரின் விசா காலம் இன்றுடன் முடிவடைவதால் அவர் இலங்கை வழியாக ரஷ்யா செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததைப் பார்த்த ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் அதை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் அந்த துப்பாக்கியை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு புதரில் வீசிவிட்டு விமானத்தில் ஏறி இலங்கைக்கு சென்றார். இதற்கிடையே அவர் துப்பாக்கியை வீசியதைப் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து அந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அந்த துப்பாக்கி ஏர் கன் வகையைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக அந்த பயணி ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம், தான் துப்பாக்கியுடன் வந்தபோது டெல்லி விமான நிலையத்தில் யாரும் தன்னை எதுவும் கேட்கவில்லை என்றும், இத்தனை நாட்கள் இந்தியாவில் துப்பாக்கியுடன் தான் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.