நாடாளுமன்றத் தேர்தல்.. அடுத்த மாதம் கூடும் மதிமுக பொதுக்குழு: யாருடன் கூட்டணி வைப்பார் வைகோ?
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ம.தி.மு.க.வின் 21வது பொதுக்குழு அடுத்த மாதம் (பிப்ரவரி) 4ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா நகர், 3வது அவென்யூ- நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இடம் இருக்க வாய்ப்பில்லை என்ற சூழலில், திமுக கூட்டணியிலும் இடம் தர மாட்டார்கள் என்பதால் தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து வைகோ கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்கவுள்ளார்.
பாமக ஜாதிக் கட்சிகள் பக்கம் போய்விட்டதால், நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க வைகோ முயல்வார் என்று தெரிகிறது.
அதிமுகவால் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதால் கடந்த சட்டமன்றத் தேர்தலையே மதிமுக புறக்கணித்ததும் நினைவுகூறத்தக்கது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று வைகோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் முதல்வர் பாதலுடன் வைகோ சந்திப்பு:
இந் நிலையில் நேற்று மாலை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை சண்டீகரில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய ஆங்கில உரைகள் மூன்று தொகுப்புகளாக வெளியிடப்படும் விழா டெல்லியில் மார்ச் 27ம் தேதி கான்ஸ்டிடியூஷன் அரங்கில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்குமாறு பிரகாஷ் சிங் பாதலை வைகோ கேட்டுக்கொண்டார். அவரும் கலந்து கொள்ள பாதலும் சம்மதித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு குறிப்பாக கலிங்கபட்டியில் வந்து ஒருநாள் தங்கியிருக்க வேண்டும் என்றும் பாதம் வைகோவிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வடிவேலுவும் வர்றாரா வைகோ சார்?