தானேவில் பாலியல் தொல்லையில் இருந்த தப்ப ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த 17 வயது சிறுமி
தானே: தானே மாவட்டத்தில் 3 ஆண்களின் அத்துமீறலில் இருந்து தப்பிக்க 17 வயது சிறுமி ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மவாட்டத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோவில் இரண்டு ஆண்கள் இருந்துள்ளனர். வாகனம் கிளம்பியவுடன் அந்த ஆண்கள் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். இதற்கிடையே ஆட்டோ டிரைவர் வாகனத்தை வேறு வழியில் ஓட்டியுள்ளார்.
இதனால் பீதியடைந்த சிறுமி கூச்சல் போட்டுள்ளார். ஆனால் பலனில்லை என்று தெரிந்ததும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். பின்னர் மும்ப்ரா காவல் நிலையத்திற்கு சென்று ஆட்டோ டிரைவர் உள்பட 3 ஆண்கள் மீது அவர் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது மற்றும் கடத்த முயன்றது ஆகிய குற்றங்களுக்காக அந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோன்று பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ராணுவ வீரர் உள்பட 2 ஆண்களின் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க டார்ஜிலிங்கைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..