யாருமே உதவவில்லை…. வேடிக்கை பார்த்த போலீஸ்… டெல்லி ஆண் நண்பரின் அதிர்ச்சி பேட்டி
டெல்லி: டெல்லியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாண நிலையில் சாலையில் உயிருக்கு போராடியபோது பொதுமக்கள் வேடிக்கைபார்த்தனர் என்று உயிரிழந்த மருத்துவமாணவியின் ஆண் நண்பர் கூறியுள்ளார். போலீசாரும் தங்களை உடனடியாக பாதுகாக்காமல் பேசிக்கொண்டிருந்தனர் என்றும் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 16ம் தேதி இரவு ஒடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியது. அப்போது அவருடன் இருந்த ஆண் நண்பரான மாணவரையும் சரமாரியாக தாக்கியது. அந்த மாணவி சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். பலத்த காயம் அடைந்த ஆண் நண்பர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டு ஒளிபரப்பியது.
அந்தப்பேட்டியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். ஓடும் பேருந்தில் இருந்து தாங்கள் வெளியே தூக்கி எறியப்பட்ட பின்னர், சுமார் 25 நிமிடங்கள் சாலையில் உயிருக்குப் போராடியதாகவும், பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
அரைமணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும் என ஆலோசனை நடத்தியதாகவும் இதில் 45 நிமிடங்கள் விரயமானதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாலை ஓரத்தில் நிர்வாணமாக விழுந்துகிடந்த எங்களை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். அப்போது, யாரோ ஒருவர் கொடுத்த துணியை வைத்து எனது தோழியின் உடலை மறைக்க முயன்றேன். ஆம்புலன்ஸ் வேன் எதுவும் வராத நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த எனது தோழியின் நிலை குறித்து மிகவும் கவலை அடைந்தேன். பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம் பயணித்து சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் அலட்சியமே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட அந்த மாணவர் இதுபோன்று பேட்டி அளித்துள்ளார்.
இந்தப் பேட்டியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.