தேனி மாவட்டத்தில் மூடப்படும் அடகுக் கடைகள்: பொதுமக்கள் சாலை மறியல்
தேனி மாவட்டத்தில், முதலில் கணபதி பேங்கர்ஸ் என்ற நகை அடகுக் கடை நிறுவனம் மூடப்பட்டது. அதையடுத்து, போடியை தலைமை இடமாகக் கொண்டு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 39 கிளைகளுடன் இயங்கி வந்த ஜி.பி. கோல்டு லோன் நிறுவனம் மூடப்பட்டது. தற்போது மூன்றாவதாக, போடி பஸ் நிலையம் எதிரே இயங்கி வந்த எம்.எம். கோல்டு லோன் நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்துக்கு போடி, பெரியகுளம், கம்பம் ஆகிய பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தின் போடி கிளையில் புதன் மற்றும் வியாழக்கிழமை தங்களது நகைகளை திருப்ப வந்த வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட ஊழியர்கள், வெள்ளிக்கிழமை பொருள்களை தருவதாக உறுதி அளித்திருந்தனர். ஆனால் அடகு நிறுவனம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் நகையை அடகு வைத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள் சாலை மறியல்
இது குறித்து தகவல் பரவியதும், இங்கு நகைகளை அடகு வைத்திருந்த 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு, அந்நிறுவனத்தை முற்றுகையிட்டனர். பின்னர், போடி-தேனி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போடி டி.எஸ்.பி. , மற்றும் வட்டாட்சியர் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார் மனுக்களைப் பெற ஏற்பாடு செய்தனர். பொதுமக்களில் திடீர் சாலை மறியலால் தேனி - போடி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லைசென்ஸ் இல்லை
தற்போது, போடியில் செயல்பட்டு வரும் தனியார் நகை அடகுக் கடைகள் குறித்து போலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர். இதில், போடி வட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நகை அடகு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதும், இவற்றில் பல நிறுவனங்கள் தங்களது பான் புரோக்கிங் லைசென்ஸை புதுப்பிக்காமல் இருப்பதும், குறிப்பாக தற்போது மூடப்பட்டுள்ள எம்.எம். கோல்டு லோன் நிறுவனமும் தனது லைசென்ஸை புதுப்பிக்கவில்லை என்றும், வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகையை திருப்பும் பொதுமக்கள்
இதனிடையே, போடியில் செயல்பட்டு வரும் மற்ற தனியார் நகை அடகு நிறுவனங்களிலும் பொதுமக்கள் தங்களது நகைகளைத் திருப்ப குவிந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் பலரும் நகைகளை திருப்ப வருவதால், வேறு நிறுவனங்களில் மாற்றி அடகு வைத்துள்ள இந்த தனியார் அடகு நிறுவனங்கள், நகைகளை உடனடியாகத் திருப்பித் தர முடியாமல் திணறி வருகின்றன.