சென்னை சிங்கள புத்த மடத்தில் காஷ்மீர் துறவி தற்கொலை!
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள இலங்கையர்களால் நடத்தப்படும் மகாபோதி சொசைட்டி என்ற பெயரிலான புத்த மடத்தில் ஒரு இளம் துறவி தற்கொலை செய்து கொண்டார். தனது இடுப்பு நாடாவால் அவர் தூக்கிட்டு மாண்டுள்ளார்.
எழும்பூர் ரயில் நிலையம் எதிரே கென்னத் லேன் தெருவில் மகாபோதி சொசைட்டி உள்ளது. சிங்கள பெளத்தர்களால் நடத்தப்படும் மடம் இது. இங்கு இலங்கையிலிருந்து வரும் சிங்கள பெளத்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் வருகை தருவர். மேலும் இங்கு ஏராளமான அறைகளைக் கட்டி வைத்துள்ளனர். அங்கு துறவிகளும் தங்கியுள்ளனர்.
இங்கு பெங்களூரைச் சேர்ந்தவரான ரத்தினபாலா என்ற 27 வயது துறவி தங்கியிருந்தார். பீகார் மாநிலம் புத்தகயாவுக்குச் செல்வதற்காக சென்னை வந்த அவர் இன்றுகாலை ரயில் மூலம் பீகார் செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலையில் தனது அறையில் மின்விசிறியில் அவர் பிணமாகத் தொங்கினார். தனது இடுப்பு நாடாக் கயிற்றால் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். எதற்காக இந்தத் தற்கொலை என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
ரத்தினபாலாவீன் பூர்வீகம் ஜம்முகாஷ்மீர் மாநிலம் லடாக் ஆகும். 10ம் வகுப்பு படித்து முடித்தவுடன் அவர் துறவியாகி விட்டார். பெங்களூரில் வசித்து வந்தார்.