அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் அவுட்: ரூ.100க்கு விற்பனை
விருதுநகர்: சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரையாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. இதற்கான வினாத்தாள்களை சி.டி.யில் பதிவு செய்து பள்ளி கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளது. சி.டி.க்களில் இருக்கும் வினாத்தாள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பிரி்ண்ட் செய்து பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ 2 மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கான அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின்னர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் இருந்து சி.டி.க்கள் சிவகாசிக்கு அனுப்பப்பட்டு வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த அச்சகங்களில் இருந்து வினாத்தாள்கள் வெளியாகி சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் 7ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வினாத்தாள் தற்போது பெரும்பாலான மாணவர்களிடம் உள்ளது.