அலகாபாத்தில் கற்பைக் காக்க போராடிய 15 வயது சிறுமிக்கு தீ வைத்த காமக்கொடூரன், குடும்பம்
அலகாபாத்: அலகாபாத்தில் வீட்டில் தனியாக இருந்த தன்னை கற்பழிக்க வந்த நபரிடம் போராடியதற்காக 15 வயது சிறுமிக்கு அந்த காமக்கொடூரனும், அவரது பெற்றோரும் சேர்ந்து தீ வைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே உள்ளது சங்கர்கர் கிராமம். அக்கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கியான் பட்டேல் என்பவர் அந்த சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.
தனது கற்பைக் காத்துக்கொள்ள அந்த சிறுமி போராடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கியான் தனது பெற்றோரின் உதவியுடன் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். கியான் தனது குடும்பத்தாரோடு சம்பவ இடத்தில் இருந்து வெளியேறியதை அச்சிறுமியின் சகோதரி பார்த்துள்ளார்.
இதற்கிடையே சிறுமியின் உடலில் தீ மளமளவென எரிந்தது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிறுமியை சிகிச்சைக்காக அலகாபாத் மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் வாக்குமூலம் வாங்க மாஜிஸ்திரேட்டை அழைத்துள்ளதாகவும், அதன் பிறகு விசாரணை துவங்கப்படும் என்றும் அலகாபாத் எஸ்.பி. அருண் குமார் பாண்டே தெரிவித்தார்.