டெல்லி பலாத்காரம் எதிரொலி... இரவில் வேலை பார்க்க அஞ்சும் கால் சென்டர் பெண்கள்
டெல்லி: டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம் பெண் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி பின்னர் கொடுமையான மரணத்தைச் சந்தித்த சம்பவம் நாடு முழுவதும் பெண்களிடையே, குறிப்பாக கால் சென்டர் போன்றவற்றில் பணியாற்றும் பெண்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாம். மாலைக்கு மேல் அலுவலகத்தில் வேலை பார்க்க அவர்கள் பயப்படுகிறார்களாம்.
டெல்லியில் 23 வயதான பிசியோதெரப்பி மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவம் எழுப்பிய அதிர்ச்சி அலைகள் இன்னும் ஓயவில்லை. தற்போது இரவில் பஸ்சில் வருவதற்கும், சாலையில் நடந்து போவதற்கும் கூட பெண்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டு விட்டது.
குறிப்பாக கால் சென்டர்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மாலை ஆனால் வீட்டை நோக்கி ஓடும் அளவுக்கு நிலைமை மாறி விட்டதாம். ஒரு வேளை கண்டிப்பாக இரவில் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் வேலையை ராஜினாமா செய்யும் அளவுக்கு அவர்கள் பயந்து போயுள்ளனராம். இதை அஸோகம் அமைப்பு நடத்திய சர்வே கூறுகிறது.
ஐடி ஊழியர்களிடையே பெரும் அச்சம்
நாட்டில் ஐடி துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தான் அச்ச உணர்வு அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக கால் சென்டர் பெண்களிடம் இரவில் வேலை பார்க்க பெரும் அச்சம் காணப்படுகிறது.
6 மணிக்கு மேல் வேலையே வேண்டாம்
மாலை 6 மணிக்கு மேல் வேலையில் இருக்க அவர்கள் விரும்புவதில்லை. வீட்டுக்குக் கிளம்பிப் போய் விடுகிறார்கள். ஒரு வேளை கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் என்ற நிலை வந்தால் வேலையை ராஜினாமா செய்யும் முடிவுக்கு அவர்கள் போய் விடுகிறார்களாம்.
மாலைக்கு மேல் முடியவே முடியாது
கருத்துக்கணிப்பி்ல் கலந்து கொண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் மாலைக்கு மேல் வேலையில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
இரவுப் பணிக்கான சூழல் சரியில்லை
67 சதவீத பெண் ஊழியர்கள், தங்களது அலுவலகத்தில் இரவுப் பணிக்கான பாதுகாப்பான சூழல் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
வேலையை விட கற்பும், உயிருமே முக்கியம்
24 வயதான அதிதி மோகன் என்ற பெண் கூறுகையில், எனக்கு சரிப்படாவிட்டால் கால் சென்டர் வேலையை நான் விட்டுவிடுவேன். கற்பும் உயிருமே எனக்கு முக்கியம் என்றார்.