ஜார்க்கண்ட் அரசு கவிழும் அபாயம்: பாஜகவுக்கான ஆதரவை விலக்கியது ஜே.எம்.எம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அர்ஜூன் முண்டா இருந்து வருகிறார்.
கடந்த 28 மாத காலமாக நடைபெற்று வரும் ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் மிரட்டி வந்தார். ஆனால் அப்படி எந்த ஒரு ஒப்பந்தமும் இரு கட்சிகளிடையே இல்லை என்று பாஜக கூறிவந்தது.
மேலும் அர்ஜூன் முன்டாவை மாற்றிவிட்டு வேறு ஒருவரை ஆட்சியில் அமர்த்துமாறும் கூறிவந்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. இந்த நிலையில் சிபுசோரனை முன்டா இன்று மாலை சந்தித்துப் பேசினார். ஆனாலும் எந்த சமாதானமும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து முன்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது.
இதனால் ஆளும் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் பாஜக மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டுக்கும் தலா 18 இடங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் 13, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 11 இடங்களைப் பெற்றிருக்கிறது. இந்த மாநிலத்தில் துணை முதல்வராக சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
ஹேமந்த் சோரனை முதல்வராக்க வேண்டும் என்ற சிபுசோரனின் முயற்சிக்கு பாஜக முட்டுக்கட்டை போட்டதால் பாஜக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.