புட்டபர்த்தி சாய்பாபா சமாதியில் சிறுநீர் கழிக்க முயன்ற டாக்டருக்கு பக்தர்கள் தர்மஅடி
ஹைதராபாத்: புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் சமாதியில் டாக்டர் ஒருவர் சிறுநீர் கழிக்க முயன்றது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் சாய்பாபாவின் சமாதி உள்ளது. அந்த சமாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமம் நடத்தும் மருத்துவமனையில் பணியாற்றுபவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் நவ்ஜித்(41).
அவர் கடந்த ஆறரை ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை அவர் சாய்பாபாவை வழிபட சமாதிக்கு சென்றார். வழிபட்ட பிறகு அவர் சமாதியின் அருகில் சென்று சிறுநீர் கழிக்க முயன்றார். இதைப் பார்த்த பக்தர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சாய்பாபாவின் சமாதியில் அசுத்தம் செய்ய முயன்ற டாக்டரை அவர்கள் நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் டாக்டரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.