இந்திராகாந்தி கொலையாளிக்கு மாவீரர் பட்டம்: அகாலி தளம் கவுரவம்
சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கியுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது மெய்காப்பாளர்களான சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ம் தேதி, திகார் சிறையில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர்
இந்த கொலையாளிகளின் 24ம் ஆண்டு நினைவு தினம், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த விழாவில் அமிர்தசரஸ் ஷிரோமணி அகாலி தளம் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிம்ரன் ஜித் சிங், தல்கல்சா தலைவர் கன்வர்பால் சிங் உள்ளிட்ட சீக்கிய மதத்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் கொலையாளிகள் நினைவாக பிராத்தனை செய்யப்பட்டது.
இந்த விழாவில் சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை சீக்கிய மதத்தலைவர் ஜியாணி குர்பச்சன் சிங் வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கினார்.
"பஞ்சாப் பொற்கோவில் மற்றும் அகாலி தக்த்தின் புனிதத்தன்மையை மதிக்காதவர்களை பழிவாங்குவதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரை நினைத்து சீக்கிய சமுதாயம் பெருமைப்படுகின்றது" என்று தல்கல்சா தலைவர் கன்வர்பால் சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர்களுடைய வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்த நாளில் சீக்கிய சமுதாயம் அவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.