தேர்தல் நிதி, விஜய்காந்துடன் கூட்டணி: திமுக மா.செக்கள் கூட்டத்தில் 'மாறுபட்டு' பேசிய அன்பழகன்!
இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஒவ்வொரு மாவட்டமும் ரூ. 2 கோடி வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதே நேரத்தில் சிறிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் ரூ.30 லட்சம் நிதி திரட்ட வேண்டும் என்று 'கருணையும்' காட்டினார்.
பெரிய மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் ரூ. 2 கோடியும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் போன்ற சிறிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் ரூ.30 லட்சமும் நிதி திரட்ட வேண்டும் என்றும் அவர் கூறியதை திமுக தலைவர் கருணாநிதியும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன். அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மாவட்ட செயலாளர்களிடமே அதிக நிதியை கேட்டால் எப்படி? இப்போது எதிர்க்கட்சியாக உள்ளோம். திமுக ஆட்சியில் நன்றாக சம்பாதித்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அவர்களிடம் அதிக தேர்தல் நிதி வசூலியுங்கள். அதே நேரத்தில் நாங்களும் இதில் பின்வாங்க மாட்டோம். நாங்களும் அதிக நிதியை வசூலித்து தருவோம் என்றார்.
மேலும் விஜய்காந்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பல மாவட்டச் செயலாளர்களும் கூறியபோது, அதிலும் அன்பழகன் மாறுபட்ட கருத்தையே தெரிவித்தார் என்று தெரிகிறது.
விஜய்காந்துக்கு இப்போது வேறு வழியில்லை. அதிமுக அவருக்கு கதவை சாத்திவிட்டது. இதனால் அவருக்கு நாம் மிக அதிகமான முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று பேசியதை கருணாநிதி உற்று கவனித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தர்மபுரி தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் தான் மிகவும் நொந்து போய் பேசியுள்ளார். அவர் பேசுகையில், தர்மபுரி தெற்கு மாவட்டத்தில் 4 ஒன்றியங்கள்தான் உள்ளன. அதை வைத்துக் கொண்டு நான் ஒரு மாவட்ட செயலாளர் என்றால் யாரும் என்னை மதிப்பதில்லை. எனவே என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விடுங்கள் என்று பேச அவரை ஸ்டாலின் சமாதானப்படுத்தினாராம்.